ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டிய அவசியம் குறித்து, உலக தாய்ப்பால் வாரம் மூலம் உணர்த்தப்படுகிறது. அடுத்து வரும் தலைமுறை ஆரோக்கியமாக வாழ, வளர தாய்ப்பாலின் அவசியம் இது குறித்து நமது “நலம்” பகுதிக்கு விளக்குகிறார், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர், பேராசிரியர் ஏ.நிர்மலா M.S(GEN).,DGO அவர்கள்…
இதுவரையிலான ஆய்வுகளில், தாய்ப்பாலைப்போன்று வேறு எந்த ஒரு உணவும், நோய் எதிர்ப்பு சக்தியை இந்த அளவிற்கு வழங்குவதை கண்டறியவில்லை. ஆகவே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பால் புகட்டுவது மிக அவசியமான ஒன்று, குறைந்த எடையில் பிறந்த குழந்தைகளின் இறப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
தாய்ப்பாலை மிஞ்சி எதுவுமில்லை
மருத்துவர்கள் எவ்வளவு தான் முயன்றாலும், எடை குறைந்த குழந்தையின் உயிர் காப்பதில் தாய்ப்பாலுக்கு மிஞ்சி நிற்பது எதுவுமே இல்லை. இன்றைய சூழலில் பணி நிமித்தமாக தாய்மார்கள் குழந்தையின் அருகிலிருந்தும் பாலூட்ட முடியாத சூழ்நிலையில், தாய்ப்பால் வங்கி பயனளிப்பதாய் உள்ளது.
தாய்மார்களுக்கு முற்றிலுமோ அல்லது போதுமானதாகவோ தாய்ப்பால் கிடைப்பதில்லை. எடை குறைந்த குழந்தைகளையும், குறை மாத குழந்தைகளையும் காப்பாற்ற தாய்ப்பால் அவசியம். நோய்வாய்ப்பட்ட குழந்தை, தீவிரசிகிச்சையில் உள்ள தாயின் குழந்தை, தாய்ப்பால் கிடைக்காத தாயின் குழந்தை, தத்து எடுக்கப்பட்ட குழந்தை, மகப்பேறு மரணமடைந்த தாயின் குழந்தை ஆகிய குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். இத்தகைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தென்னிந்தியாவின் மிகப்பெரும் தாய்ப்பால் வங்கி
2014 ஆம் ஆண்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை உட்பட 5 அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய தாய்ப்பால் வங்கியாகவும் செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மட்டும் 1,100 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டதில், சுமார் 1,228 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இதுவரை சுமார் 450 தாய்மார்கள் தாய்ப்பால் வங்கிக்கு தானம் செய்துள்ளனர்.
ஐந்தாண்டாக முதல்பரிசு தாய்ப்பால்
வங்கியின் சிறப்பான சேவைக்கு ஆணிவேராக இருப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். தானம் வழங்க விருப்பமுள்ள தாய்மார்களிடமிருந்து, தாய்ப்பால் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. தாய்ப்பால் வங்கியால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, சிசு இறப்பை தவிர்க்க முடியும். அந்தவகையில், கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து வருடங்களில் 1 முதல் 1.5 கிலோ எடைக்கும் குறைவாய் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை வெகுவாய் குறைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைவாகியுள்ளதற்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த ஐந்து வருடங்களாக முதல் பரிசை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கியுள்ளது.
சர்க்கரைத் தண்ணீர் கூடாது
பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை தண்ணீர், தேன், சீம்பால் போன்றவை கொடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும். தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும். இதனைவிட வேறு எதிலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது அறிவியல்ப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, பச்சிளம் குழந்தைகளுக்கு மேற்கண்டவற்றை கொடுப்பதை தடுக்க வேண்டும் என்றார்.